Wednesday, February 27, 2008

காதல் - இதுவாகவும் .. இதுபோலவும் !


தொலைந்தது அறிந்திருந்தும்

தொடர்கின்ற பயணம்

=====================

மீட்கப்படாத வீணை தந்த

கேட்கப்படாத ராகம்

=====================

இருவரும் ... இருவரில்

ஒளிந்து கொள்ளும்

கண்ணாமூச்சி

=======================

திரியும் நெருப்பும்

முத்தமிடும் புள்ளி

======================

பிறந்த குழந்தையின்

சுண்டுவிரல் நகம்

=========================

அலைகள் விட்டுச் செல்லும்

மணலைக் கொஞ்சும் ஈரம்

=========================

Monday, February 11, 2008

Valentine's Day விதைத்த கவிதை !


மரித்த பூக்களுக்கெல்லாம்
காகிதத்தில் கல்லறை செய்து ,
எவனோ உமிழ்ந்த எச்சத்தில்
உயிர் வாழும் அட்டையோடு ,
மெழுகின் மங்கிய ஒளியில் உணவருந்தி ,
நம் காதல் உயிர் பிழைக்க வேண்டாம் ...


நடைபாதை ஆவாரம்பூவை
நடந்தவண்ணம் ரசித்துக்கொண்டு ,
நகராது போன நிமிடங்களைப் பற்றி
நிறுத்தாமல் பேசிக்கொண்டு ,
தெரியாமல் விரல்படவேண்டி
தெரிந்தே உன்னருகில் வரும்பொழுது ,
இரண்டறக் கலந்த மூச்சுக்காற்றை
இயன்றவரை சேகரித்து வை .....

அதில் மட்டும் வாழ்ந்தால் போதும் ,
உனக்கும் எனக்குமான காதல் !

Friday, February 1, 2008

இனியும் வரப்போவதில்லை ...

அன்றைப் போன்ற
அழகானதொரு நாள்
இனியும் வரப்போவதில்லை ...

பிரபஞ்சத்தின் ,
ஒற்றை ஆண்மகனோ நீ - எனுமாறு
அகன்ற என் விழிகள் ...
நான் மட்டும் தான் அழகியா - எனச்
சுயசோதனை செய்யச் சொன்ன
தீர்க்கமான உன் பார்வை ,
இனியும் வரப்போவதில்லை ...

அலைகளைத் தாண்டிய
ஆழ்கடல் அமைதியை நினைவுறுத்தும்
மௌனத்தை மையப்படுத்திய
நம் உரையாடல்கள் ,
இனியும் வரப்போவதில்லை ...

அர்த்தமற்ற பரிமாற்றங்கள் ஆயினும்
அதை அர்த்தப்படுத்த முயற்சித்த
தூக்கிய என் புருவங்களும்
தொலையச் செய்யும் உன் புன்னகையும்
இனியும் வரப்போவதில்லை ...

விலகப் போகிறோம் என்ற
நிதர்சனம் அறிந்திருந்தும்
நெஞ்சின் அடியில் ஒட்டிக்
கொண்டிருத்த விருப்பமும் ,

தனித் தனி உலகிற்கான
தயாரிப்பில்லாத மனதும் ,

எழுந்து நடக்க ஆயத்தமான பொழுது
கண்களைப் பிரிய மறுத்த
கண்ணீர் துளிகளும் ,
இனியும் வரப்போவதில்லை ...

அன்றைப் போன்ற
அழகானதொரு நாள் ,
இனியும் வரப்போவதில்லை !