Wednesday, April 16, 2008

சப்தமிடும் நிசப்தங்கள் ...


நிசப்தமாய் நின்றிருந்த நீர் பரப்பில்
கற்களை எறியத் துவங்கினேன்

முற்றிலும் எதிர்பாராத சலனங்கள் ...
வளர்தலை மட்டுமே பறைசாற்றப் பிறந்த வட்டங்கள்
அவற்றினூடே பிம்பமாய் நானும் வளர்கிறேன்
சின்னக் குழந்தையின் குதூகலத்தை ஒத்த நீர்த்திவலைகள்
அசைந்திராத எல்லாமும் அசைகிறது
குறுகிய எல்லாமும் வளர்கிறது
எனினும்
வளர்ந்த எதுவும் மேலும் வளரவில்லை
தேய்தலுக்கு உட்படவும் இல்லை
இறத்தலை ஒத்த பிரிதல்
மீண்டும் நிசப்தம் ...


இம்முறை நேர்ந்த
நிசப்தம் கொடியதாய் தோன்றியது
நான் ஏற்படுத்த விழைந்த சலனத்தின் பிரிவு
நீர்பரப்பை கொஞ்சம் கொஞ்சமாய் தின்னத்தொடங்கியது ...


அவசியமற்றதாகத் தோன்றியது என் செயல்
நிகழாமை நிகழ்ந்திருக்கலாம்
உன்னில் வாழ்ந்த அதே குரூரம் இப்பொழுது என்னிலும் ..
நீர்பரப்பை ஒத்திருக்கிறது என்நெஞ்சம் .

18 comments:

Dreamzz said...

ஆழ்ந்த அர்த்தங்கள். அருமை

Lakshmi Sahambari said...

Thangal vaasipirkum Vimarsanathirkum Nandrigal :-)))))))

பரத் said...

Lakshmi,
நல்ல கவிதையில் சொல்லப் படாத வரிகள் இருக்கும்.இந்தக் கவிதையில் அது கிடைத்தது.அதே போல வாசகனின் சுய-இன்டெர்ப்ரடேஷன்(interpretation)-ஐ அனுமதிக்கவேண்டும்.அதாவது நீ எதை மனதில் கொண்டு எழுதினாயோ,வாசகனும் அதையே எண்ண வேண்டும் என்ற அவசியம் ஏற்படாதபடி ஜெனரலைஸ் செய்யப் பட்டிருக்க வேண்டும்.இந்தக் கவிதை அவ்வாறே வந்திருப்பதாகத் தோன்றுகிறது.உதாரணம், இந்தக் கவிதையில் நான் பொருள் கொண்டவிதம்


//வளர்தலை மட்டுமே பறைசாற்றப் பிறந்த வட்டங்கள்அவற்றினூடே பிம்பமாய் நானும் வளர்கிறேன் // - குறுகிய கால புகழ்,மமதை

//மேலும் வளரவில்லை தேய்தலுக்கு உட்படவும் இல்லை // - தேக்கம்

//இம்முறை நேர்ந்த நிசப்தம் கொடியதாய் தோன்றியது.... // - கிடைத்த ஒன்று இடையில் மீண்டும் இல்லாது போகும்போது தோன்றும் வெறுமை ,

//அவசியமற்றதாகத் தோன்றியது என் செயல் நிகழாமை நிகழ்ந்திருக்கலாம் // -- ஆத்மாநாம் என்ற பெருங்கவிஞன் சொன்னது போல "எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருந்திருக்கலாம்"

hmm yeah,...you can not add or remove even a single word from this poem.perfectly edited.Gud to see you experimenting new things.Wishes...

Kesavan said...

to be frank... இந்த கவிதை எனக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது புரிந்து கொள்வதற்கு, பரத்-தின் interpretation கொஞ்சம் உணர்த்தியது .. hats off... வாழ்த்துக்கள்..

Lakshmi Sahambari said...

பரத்

இந்த கவிதைக்கான பல்வேறு விமர்சனத்தில் வித்யாசமானதாக அமைந்தது உங்களுடைய விமர்சனம் !! இந்த கவிதையின் ஆழத்தை விட உங்களின் வாசிப்பு திறன் மிளிர்கிறது :-)))))

கேசவன்
:-)
இது போன்ற கவிதைகள் - முதலில் புரியாமல் போனாலும் - பலமுறை வாசிக்க பல்வேறு பொருள் தரும் - கண்டிப்பாக திகட்டாது என நினைக்கிறேன் :-)

Divya said...

ஆழமான அர்த்தமுள்ள கவிதை!!

\\நிகழாமை நிகழ்ந்திருக்கலாம் \\

எப்படி இப்படி எல்லாம் வார்த்தைகளை அழகாக கோர்கிறீர்கள்??

ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க!

பாராட்டுக்கள்!!

Lakshmi Sahambari said...

Thanks Divya:-)

MSK / Saravana said...

"இம்முறை நேர்ந்த
நிசப்தம் கொடியதாய் தோன்றியது
நான் ஏற்படுத்த விழைந்த சலனத்தின் பிரிவு
நீர்பரப்பை கொஞ்சம் கொஞ்சமாய் தின்னத்தொடங்கியது ...

அவசியமற்றதாகத் தோன்றியது என் செயல்
நிகழாமை நிகழ்ந்திருக்கலாம்
உன்னில் வாழ்ந்த அதே குரூரம் இப்பொழுது என்னிலும் ..
நீர்பரப்பை ஒத்திருக்கிறது என்நெஞ்சம்."

மிக மிக மிக அருமை..
என்னிடம் பாராட்ட வார்த்தைகளே இல்லையென்பதை உங்களுக்கு எப்படி புரியவைப்பது..?

நளன் said...

நான் மிகவும் ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று :)

tamizhppiriyan said...

//உன்னில் வாழ்ந்த அதே குரூரம் இப்பொழுது என்னிலும் ..
நீர்பரப்பை ஒத்திருக்கிறது என்நெஞ்சம் .//

அருமை!அருமை..!வாழ்த்துக்கள்

Sudhesh said...

nice poet yaar...keep going on..

Lakshmi Sahambari said...

Thnks 4 Ur Valuable comments :-))

Muthusamy Palaniappan said...

Nice!

காலம் said...

உங்கள் பக்குவத்தின் சேகுகள் வரிகளுக்குள் காணக்கிடைக்கிறது
வாழ்த்துக்கள்

Lakshmi Sahambari said...

@ Away and Naathari

Ungalin Varugai Mikka magizchi alikirathu - Vimarsanangalukku nenjaarntha nandri :)

Anonymous said...

என்னவளிடம் சண்டையிட்ட பொழுது,
அவள் என்னை விட்டு விலகுகிறாள் என்றெண்ணிய பொழுது
உந்தன் உணர்வு சித்திரத்தை வாசித்தேன்.
அதை விட வேறெந்த சூழ்நிலையில் நான் இக்கவிதையை இவ்வலியை முழுமையாக உணர நேர்ந்திருக்கும் ???
ஆனால், நான் அதிர்ஷ்டம் உள்ளவன்.. என்னுடைய நிசப்தம் நிரந்தரம் அல்ல.
என்னவளும் அழகு..
உன் கவிதையும் அழகு... !!!

Really a gr8 piece ofwork from you Lakshmi. I am interested in reading all your poems.

--அன்பரசு--

Lakshmi Sahambari said...

வருகைக்கு நன்றி அன்பரசு .. உங்கள் காதல் கனிந்ததற்கு வாழ்த்துக்கள் !!

மற்ற கவிதைகளையும் வாசித்து விட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும் :-)))))))

Dominic RajaSeelan said...

அருமையான கவிதை