Sunday, March 29, 2009

....

சுகித்து நீ உறங்குகிறாய்
என் விழிகளுக்குள் தூசியாக ...

Friday, March 13, 2009

...

அலைகளை போலானது வாழ்வு
உயரங்களை உச்சி முகர்ந்து
மண்ணுடன் ஆகிறது உறவு ...

Thursday, March 12, 2009

பகிர விரும்புகிறேன் ...

காலச்சுவடு மற்றும் வார்த்தை ஆகிய இதழ்களில் எனது கவிதைகள் பிரசுரமாகி உள்ளது .. இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் !

http://www.kalachuvadu.com/issue-111/page45.asp
http://www.pksivakumar.blogspot.com/

Thursday, January 22, 2009

....


பற்றுதலில் படர்கிறது
உனது காதல்
பற்றப்படுதலில் கசிகிறது
எனது காதல்
நிழல்களில் நகரும்
கோர்க்கப்பட்ட விரல்களில்
பிரித்தாய இயலுவதில்லை
நமக்கான காதலை ...


Saturday, January 17, 2009

...


கண்ணிமையால் துழாவி
உன் நெஞ்சத்தின் வெற்றிடங்கள்
அறிகிறேன்
பவித்ரமான காதலால்
அவை நிரம்பி வழியவும் கூடும்

Tuesday, December 30, 2008

'2009

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - நிலாக்காலம் !!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

Sunday, December 28, 2008

...

உள்ளங்கைக்குள் உறங்கட்டும்
என் காதல் ...
என்றேனும்
ஒற்றை பற்றுதலில்
முழுவதுமாய்
நீ உணரக்கூடும் ...

Sunday, December 7, 2008

இருத்தல்

பத்திரமாய் படிந்திருக்கிறது 
பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் 
பழுப்பேறிய நோட்டுப்பக்கங்களில் 

இதுவே போதுமானது 
உயிரைப்பிழியும் என் தனிமையை 
வரைதலில் எடுத்துரைக்க 

ஜன்னல் கண்ணாடியில் 
மங்கிய வெளிச்சத்தில் 
எனதென ஊகிக்ககூடியதாய் 
ஒரு பிம்பம் 
அனுமதிப்பதில்லை 
தனிமைக்கான என் சித்திரத்தை 

தனிமையிலேனும் 
உண்டாகிறது 
எனக்கான என் இருத்தல் 





 
 

Tuesday, November 4, 2008

திரையாலாகுவது ...



மெல்லியதொரு திரைச்சீலை
நம்மிடையே
அவசியப்படுகிறது
அநேகக் காரணங்கள்
அதற்கானதாய்
என்னிடத்தில்

உன் விழிகளின் வசீகரம்
என்னை விழுங்கிடாதிருக்கவும்

சுவாசத்தின் வெம்மைதனில்
நெகிழ்ந்து இளகாதிருக்கவும்

சிநேகத்தின் பரஸ்பரங்களில்
சிதறுண்டு போகாமலிருக்கவும்

இன்னும்
இனியும்
எத்தனையோ அத்தனையும்
எனைப் பத்திரப்படுத்த

எப்பொழுதேனும்
இதனில் என்னை
முழுவதுமாய் வாரிச்சுருட்டி
உன் உள்ளங்கைக்குள்
பொதிந்து வைக்கவும் ஆகிறது ...

Tuesday, September 23, 2008

உன் விரல் பிடித்துக் கொள்கிறேன் ...


உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்
அனிச்சையாய் ..
இருள் படர
ஆயத்தமாகும் பொழுது


வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

உறுதியளிக்க முடியாது தான்
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும் உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
இருட்டிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள் தென்படக்கூடும் ..