Tuesday, August 9, 2016

...

இவ்வறைக்குள் 
திணறும் சுவாசத்தை 
இந்த ஜன்னல் வழியாக 
எங்கேயனுப்பலாம் ?

Friday, March 4, 2016

மஸ்ய ராணி

நீளும் என் இரவுகள்
ஒரு கண்ணாடி ஜாடிக்குள் 
சமுத்திரமென
சஞ்சரிக்கையில்
மஸ்ய ராணியாய்
சயனித்திருக்கிறேன்
தங்கநிற மயிர்கற்றைகளை
கோதியவாறு புறப்படும்
உன் புகார்கள்
இப்பொழுதில்
என் செவி சேர்வதில்லை
பகிரங்கமாய்
அறிவிக்காவிடினும்
சரணடையும்
உன் புலன்களில்
பொறிக்கிறேன்
நீ அறிந்தேயிராத
என் தரப்பை
ஆறாக் காயங்களின் சீழை
மாறின் இடையோடும் உப்பு நீர்
கழுவிச் செல்லுகையில்
பேரிரைச்சலோடு
இளைப்பாறத் துவங்குகிறேன்

Saturday, February 27, 2016

...

சாயந்திர நடையில் 
பதிவாக 
தோளமர்ந்து வருகிறது 
ஒரு வண்ணத்துப்பூச்சி 

அரக்கும் 
வெளிர் மஞ்சளும் 
வெள்ளை புள்ளிகளும்
குறுக்கில் சாம்பல் நிற 
கீற்றுகளும்
கொண்டதாய் உள்ள
அழகான 
இவ்வண்ணத்துப்பூச்சிக்கு 
இல்லை 
நிறங்கள் குறித்தான 
அனுமானங்கள் 









Monday, November 10, 2014

....

மழைக் கம்பிகளை
இலகுவாய் பற்றி
வானம் புக
ஆயத்தமாகிறது
சற்று முன்
குளமாய் மாறிய
என் தேகம்

Monday, September 15, 2014

அனக்கங்களற்ற நதி

நானற்று நீ நடந்த
அந்த ஏழாவது அடியில்
பிறக்கிறது
ஓர் அனக்கங்களற்ற நதி

நேற்றிரவு அனிச்சையாய்
படர்ந்தது வரை
நமதான ஸ்பரிசங்கள் யாவும்
இலைகளாய் உருக்கொண்டு
மிதக்கின்றன

ஸ்தம்பித்த மேகங்களின்
கடைசி காதற்துளி
இனி ஏற்படுத்த போவதில்லை
எந்தவொரு அதிர்வையும்
ஏதாவதொரு நீர்த்திவலையையும்

எனினும்
தீர்க்கமாய் தெரிகின்ற
என் பிரதி பிம்பத்தில்
மிக சமீபத்தில்
நீ

Friday, October 26, 2012

:)

x
வலியறியும்
கண்ணீர் உறுஞ்சும்
வெளிரும் காதலறியும் 
தாளாத பிரிவும் புரியும் 

எல்லாம் க்ரஹித்த பின்பும் 
என் அடிவயிற்றை
சிநேகத்தோடு ஸ்பரிசிக்க 
விளைந்திராத
உன் பிஞ்சு பாதங்களுக்கு 
மட்டுமியலும் 

Monday, February 13, 2012

...




கொஞ்சம் அருகிலமர்
தலை கோது
மூக்கில் உரசு
புன்னகை
நான் முத்தமிடுகிறேன்

Saturday, April 16, 2011

!

சுயவிரக்கதின் ஜ்வாலை
என் பாதங்களில்
பற்றத் துவங்குகையில்
கசிகிறது
இறப்பின் விசும்பல்கள்

கர்வத்தின் பெருமழை
என் சிரசினின்று
பொழியத் துவங்குகையில்
பீறிடுகிறது
சிருஷ்டியின் பிரவாகம்

முரண்களின்
மொத்தமும்
என்னில்

நான்
பூரணமானவள்

Friday, October 22, 2010

....

நடக்க யத்தனிக்கும்
குழந்தைகள் பறவைகள்
அவர்கள்
அறியாமற் பதிக்கின்ற
ஒவ்வொரு அடியிலும்
பிறக்கிறது
மற்றுமொரு வானம்

Wednesday, October 6, 2010

:)

விடாது பொழியும்
மழை விட்டுச் செல்லக்கூடும்
வானவில்லை
சிலநேரங்களில்
கவிதையையும்

Wednesday, November 4, 2009

...

ஒன்றுமிருப்பதில்லை
இந்தபுகைப்படத்தில் ..

அன்றைய அக்காட்சியின்
உயிர்மையில்லை
நிறத்தின் வீரியமில்லை
நாசி நிறைத்த வாசமில்லை
செவியில் ரீங்காரமிட்ட
சப்தங்களில்லை

கேமரா அறியாது
தீண்டிய உன்விரல்களும்
படபடத்த என்னெஞ்சமும்
நினைவில் வருவதுண்டு

Thursday, October 22, 2009

யாரோ சிந்திய புன்னகை



வசீகரமானதாயுள்ளது
யாரோ சிந்திய அப்புன்னகை
முகத்தின் குறைகளனைத்தையும்
கொன்று தின்று விட்டு
எவ்வித சலனமுமின்றி
மெல்ல எழும்புகிறது
என் கவனத்தையும் வார்த்தைகளையும்
பறித்த வண்ணம்
அதன் கோரைப்பற்களை
காண்பிக்கத் துவங்குகிறது
அக்கினியை உமிழ ஆயத்தமாகிறது
என்னிடமிருந்த எல்லாமும்
பொசுங்கத் துவங்குகையில்
நினைவு கூர்கிறேன்
புன்னகைக்க மறந்த
தருணங்களை



Sunday, October 11, 2009

.....


வெளிறச் செய்யும்
டிராபிக் நெரிசலில் ..
மறவாது எனையழைத்துச் சொன்னாய்
சற்று முன் பொழிந்த
ஆலங்கட்டி மழை குறித்து

அருகிலிருந்தால்
நீ நனைந்திருக்கலாம்
மழைக்காகவோ
உன் அழைப்பிற்காகவோ
எதற்காகவோ
என்னில் பொழிந்த மழையில்

Friday, July 17, 2009

....


எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்

.............

கதவுகள் திறக்கப்பட்டு
வெளிச்சம் வழியும் அறையில்
தரையில் அமர்ந்தபடி
உன்னுடன் அருந்திய
தேநீர் பற்றி

எதிலோ தொடங்கிய
உரையாடல்
லதா மங்கேஷ்கரில்
மையம் கொண்ட பொழுதில்
தூரத்திலிருந்து பிரயாணித்து வந்த
சாவன் கா மகீனா
பாடல் பற்றியும்

நீ ரசித்துச்சொன்ன
குழந்தை பிராயத்து
குதூகலங்களும்
கோமாளித்தனங்கள்
குறித்தும்

மழைக்காலத்து
மேகங்கள் குறித்தும்
லேசாக நனைக்கும்
சாரல் குறித்தும்

அப்பொழுது
அனிச்சையாய் கோர்த்துகொண்ட
நம் விரல்கள் குறித்தும்
முத்தமிட்டது குறித்தும்

............

எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்

எனினும்
பின்மழை பொழுதுகளில்
கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை
காகிதங்களில் வசிப்பதில்லை

Monday, July 13, 2009

...



தேநீர்க் கோப்பையில்
தெரிகிறதென் பிம்பம்

அதுவாக
இருந்திருக்கலாம்
எப்பொழுதேனும்

தெரியாதவை
தெரியாமலே போய்விடும்
அப்பொழுதில்
நிறையத் தெரிவேன்
நிறையத் தெரியாமல்
நான்

Sunday, May 24, 2009

....

முத்தம் பற்றிய கவிதைகள் 
பொருளற்று போகிறது 
விரும்பிப் பகிரப்பட்ட 
முத்தத்திடம் 

Sunday, March 29, 2009

....

சுகித்து நீ உறங்குகிறாய்
என் விழிகளுக்குள் தூசியாக ...

Friday, March 13, 2009

...

அலைகளை போலானது வாழ்வு
உயரங்களை உச்சி முகர்ந்து
மண்ணுடன் ஆகிறது உறவு ...

Thursday, March 12, 2009

பகிர விரும்புகிறேன் ...

காலச்சுவடு மற்றும் வார்த்தை ஆகிய இதழ்களில் எனது கவிதைகள் பிரசுரமாகி உள்ளது .. இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் !

http://www.kalachuvadu.com/issue-111/page45.asp
http://www.pksivakumar.blogspot.com/

Thursday, January 22, 2009

....


பற்றுதலில் படர்கிறது
உனது காதல்
பற்றப்படுதலில் கசிகிறது
எனது காதல்
நிழல்களில் நகரும்
கோர்க்கப்பட்ட விரல்களில்
பிரித்தாய இயலுவதில்லை
நமக்கான காதலை ...