
என் கூரைகளை
வானங்களாக்கிக் கொண்ட
அன்பு மனைவிக்கு ....
உணர்வுப் பகிர்தலுக்காக ஏங்கும்
அறுபதைத் தொடும்
உன்னவன் எழுதுவது .
மறக்க முடியாத சில தருணங்கள்
மனதில் நிழலாடுகிறது
பகிர்ந்து கொள்ள வேண்டும்
போல் இருக்கிறது ,
பாசிபடிந்த பழையவைகளை ..
ஞாபகம் வருகிறதா ,
என் பார்வைக்கு
பதிலளித்த உன் புன்னகை ..
அந்த செண்பகப்பூ புன்னகையை எண்ணி
நான் பூரிக்காத நாளில்லை .
பிற்பொழுதுகளில் ,
உன் புன்னைகையை கூட
பொருட்படுத்தாதவாறு
என் அலுவல்கள் ...
மணக்கோலத்தில்
மலர்ந்த மலராய் நீ..
மனம் பற்றியவளை
கைப்பற்றினேன் என்ற
கர்வம் மட்டும் என்னில்..
உன் இயல்புகளை பற்றி
இம்மியளவும் அறிந்திருக்கவில்லை
அறிய முற்படவும் இல்லை..
ஒன்று மட்டும் அறிந்திருந்தேன்
உன் விருப்பங்களை கருக்கி ,
என் விருப்பங்களை
குளிர் காயச்செய்தாய் ...
என் மீதான உன் புரிதல்
எந்த நிலையிலும் தோற்றதில்லை .
நான் அடிக்கடி தோற்றேன்
என் மீது நீ கொண்ட
அன்பின் வெற்றியால் ..
வேகமாய்ச் சுழல்கின்ற
இயந்திர உலகத்தில்
நீ மட்டும் எனக்கு ,
ஆதரவாகவும் ...
ஆதாரமாகவும் ...
நம் மகளின்
முதல் அழுகுரலை விட ,
அதற்கான உன் அழுகை நீரை
நேசித்தேன் ..
அதை விட
நம் முதுமையை பறைசாற்றப்
பிறந்த பேரக்குழந்தைகளை
நீ அள்ளி அணைக்கும் பொழுது
உன்னை அதிகம் நேசித்தேன் ..
காலத்தின் வேகத்தை
சமநிலையில் ஏற்றுகொள்கிறாய் ...
உன்னால் மட்டும் எப்படி ?
பேசவேண்டிய சில தருணங்களில்
நான் மௌனித்திருந்த நிமிடங்கள் பல ..
மன்னித்தருளினாய் -
புள்ளிகளை பூகம்பங்கள் ஆக்காது !
வெளிப்படுத்தாத என் வார்த்தைகளின்
வெளிப்படையான அர்த்தங்களை
நீ நன்றாகவே அறிந்திருந்தாய் ...
இயன்றவரை உன்னை விரும்பினேன்
இன்றுவரை இயலவில்லை
அதனை வெளிப்படுத்த ...
மாறாத என் காதல் தேவதையே
உன்னிடம் நிறைய பேச வேண்டும் -
நிகழ்ந்தவைகளை பற்றி ,
நிகழாதவைகளைப் ,
நிஜங்களைப் பற்றி ,
நம் நேசத்தைப் பற்றியும் ...
பகிர்ந்து கொள்ளத் தவறிய
பழைய நினைவலைகளில்
நாம் கால் நனைக்க வேண்டும் ..
இப்பொழுது ,
இளமையின் கர்வம்
என்னிடத்தில் இல்லை .
குழந்தை எனக் கைப்பற்றிக் கொள்கிறேன்
கூட்டிச் செல் எங்கேயாவது .....
நம்மைச் சுற்றி எந்தப் பிணைப்புகளும் இல்லை - வா
நம் அன்பின் பிணைப்பை மேம்படுத்துவோம் !!
நரையையும்
இரத்த அழுத்தத்தையும்
சர்க்கரை நோயையும்
பொருட்படுத்தாத காதல் பயணம்
இனிதே தொடங்கட்டும் !
மறவாதே ,
உன் விழிநீர்த்துளிகளுக்காக
என் சுண்டு விரல்
காத்துக்கொண்டிருக்கிறது ...
அன்புடன்
...................